அரசு பணி தான் கனவா? ரெடியா இருங்க! நடப்பு ஆண்டிலேயே 40,000 பணியிடங்கள்.. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு



கடந்த 4 ஆண்டுகளில் 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், நடப்பு நிதி ஆண்டில் மேலும் 40,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.


அரசு வேலைக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால், திமுக அரசின் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.


கட்டுமானம், போக்குவரத்து, பஸ்கள், கல்வி, சுகாதாரம் என பல்வேறு துறைகள் மற்றும் புதிய திட்டங்கள் என பல்வேறு அறிவிப்புகளை தங்கம் தென்னரசு அறிவித்து வருகிறார். அந்த வகையில், படித்துவிட்டு அரசு வேலைக்காக தயாராகி வரும் இளைஞர்களுக்காக நடப்பு ஆண்டில் 40,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது:-


40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்


மாநிலத்தில் உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 21,866 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 பணியிடங்களை வரும் நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.


சுற்றுலாத்துறை


சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்திடும் பொருட்டு, மாமல்லபுரம்-மரக்காணம் வரையிலான கடலோரச் சுற்றுலா வழித்தடம். திருச்சி-தஞ்சாவூர். நாகை சோழர்காலச் சுற்றுலா வழித்தடம். மதுரை சிவகங்கை மரபுசார் சுற்றுலா வழித்தடம். கோவை-பொள்ளாச்சி வரையிலான இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு. அங்கு சுற்றுலா வளர்ச்சிக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்த்திட உரியநடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog