ஜூன் மாதத்திற்குள் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்; 6 மாதத்தில் மீண்டும் செட் தேர்வு; முக்கிய அப்டேட்



தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் மாதம் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், 6 மாதத்தில் மீண்டும் செட் தேர்வு நடத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதறகான அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான தேர்வு ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், நிர்வாக காரணங்களில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இதற்கிடையில், தமிழ்நாட்டில் செட் தேர்வு சில ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது நடைபெறுகிறது. முதலில் 2024 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இத்தேர்வை நடத்தவிருந்தது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படுகிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியமே செட் தேர்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், வருகின்ற ஜூன் மாதம் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.


மேலும், தமிழ்நாட்டில் 2,200 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்திருக்கிறோம். அது போதிய அளவில் இல்லை. இந்த மாதம் 6, 7, 8 தேதிகளில் செட் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட இருக்கிறது. அதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. 


இதற்கான வினாத்தாள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் ஒருமுறை செட் தேர்வு நடத்தி காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மார்ச் இறுதிக்குள் 1000 கவுரவ விரிவுரையாளர்களும், ஜூன் மாதத்திற்குள் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில், செட் தேர்வை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். இதில் பலர் டி.ஆர்.பி நடத்தும் உதவிப் பேராசிரியர் தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடைபெற வேண்டிய தேர்வு, காலம் தாமதமாகி வருவதால் லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 


செட் தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து, டி.ஆர்.பி மூலம் உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 4000 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு மீண்டும் விண்ணப்பங்கள் பெற வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog