குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மீண்டும் மாற்றமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
மீண்டும் பாடத்திட்டம் (syllabus) மாற்றப்படும் என்ற தகவலில் உண்மையில்லை எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை ஆண்டு தோறும் டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வருடக்கணக்கில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளை எழுதி வருகிறார்கள்.
குரூப் 4 பாடத்திட்டம்
எப்படியாவது ஒரு அரசு வேலைக்கு போய் விட வேண்டும் என்ற கனவுடன் பட்டம் முடித்த பலரும் பயிற்சி மையங்களுக்கு சென்றும், வீட்டில் இருந்தபடியும் விடா முயற்சியுடன் படித்து கனவை நிறைவேற்றி வருகிறார்கள். தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக ஏதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தையும் அறிவித்துள்ளது. குரூப் 1, 2 , 2 ஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கு பட்டப்படிப்பு கல்வி தகுதி என்பதால் அதற்கான பாடத்திட்டம் உள்ளது.
அதேபோல, குரூப் 4 தேர்வுக்கு பத்தாம் வகுப்புதான் குறைந்தபட்ச கல்வி தகுதியாகும். எனவே அதற்கு நிகரான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தை மாற்றி வெளியிட்டது. புதிய திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பாடத்திட்டம் வெளியிடப்பட்டு இருந்தது.
பாடத்திட்டம் மாற்றப்படுகிறதா
டிஎன்பிஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி மீண்டும் பாடத்திட்டத்தை மாற்றப்போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால், தேர்வுளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கலக்கம் அடைந்தனர். தற்போது, இதற்கு டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக கூறியிருப்பதாவது: - 2025-ல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 1, 2, 2ஏ, குரூப் 4 பணிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 2024 ல் தேர்வு ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். பாடத்திட்டம் மேலும் மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறினார்.
Comments
Post a Comment