
பணி நிரந்தரம் கேட்பதால் தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை இல்லையா? இதுவா திமுக சமூகநீதி?- ராமதாஸ் பணி நிரந்தரம் கேட்பதால் தற்காலிகப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை இல்லையா? இதுவா திமுகவின் புதிய சமூக நீதி என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''தமிழ்நாட்டில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் பலர் பணி நிலைப்பு கோரி நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதாகவும், அதனால், அவர்கள் ஒரு மாதம் பணியாற்றினால், அடுத்த மாதம் பணி வழங்கக்கூடாது என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. சமூக நீதிக்கும், மனித நேயத்திற்கும் எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது. டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்பட வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், ''வட்டார அளவில் தற்...