நிதி நெருக்கடியால் ஆசிரியா் நியமனங்கள் நிறுத்தம்: அன்புமணி கண்டனம்





நிதி நெருக்கடியால் ஆசிரியா் நியமனங்களை தமிழக அரசு நிறுத்தியுள்ளதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.


இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:


தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இடைநிலை ஆசிரியா்கள் தொடங்கி கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா்கள் வரை அனைத்து நிலை ஆசிரியா் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 


இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் ஒருவா் கூட நியமிக்கப்படவில்லை.


தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கும் கூடுதலான ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை மட்டுமே நிரப்பப் போவதாகவும், மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் நிதிநெருக்கடி ஐயத்தை உறுதி செய்கின்றன.


ஒரு மாநிலத்தின் வளா்ச்சிக்கான முதன்மைத் தேவை கல்விதான். தமிழகத்தில் கல்வித் துறைக்கு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6 சதவீதம் செலவிட வேண்டியுள்ள நிலையில், ஒன்றரை சதவீதத்துக்கும் குறைவான தொகை தான் செலவிடப்படுகிறது. 


இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்காக ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் கோடியாவது ஒதுக்க வேண்டும். இதுவும் கூட மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சுமாா் 3 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும். முதல்கட்டமாக இந்த அளவு நிதியை ஒதுக்கீடு செய்து விட்டு, படிப்படியாக இதை அதிகரிக்க வேண்டும்.


 காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் அனைத்தையும் மாா்ச் மாதத்துக்குள் நிரப்பவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.



Comments

Popular posts from this blog