TNPSC குரூப் 4 தேர்வு - தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!




தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ள முக்கிய விதிமுறைகள்;


விண்ணப்பதாரர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்தப் பின்னரே, தேர்வர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் முற்பகல் 9 மணிக்கு வழங்கப்பட்ட பின்னர் விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும்.

9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள்ளேயும், 12.45 மணிக்கு முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேற செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் (ஹால் டிக்கெட்), தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் (PAN CARD) வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வரவேண்டும்.

தேர்வர்கள் ஓஎம்ஆர் (OMR) விடைத்தாளில் தேர்வு தொடங்குவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்தபின் ஒரு கையொப்பத்தினையும், தேர்வு முடிவடைந்தபின் மற்றொரு கையொப்பத்தினையும் இடவேண்டும்.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லையெனில், தன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்க வேண்டும்.

ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் மற்றும் வினாத்தொகுப்பு ஆகியவற்றை சரிபார்த்து, விண்ணப்பதாரர் வருகைத்தாளில் தனது பெயர், பதிவெண் உள்ளதை உறுதி செய்து, அதில் தன்னுடைய வினாத்தொகுப்பின் எண்ணையும் குறிப்பிட்டு, கையொப்பமிடவேண்டும்.

தொலைபேசி, கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், மின்னணு சாராத பொருள்களான புத்தகங்கள், குறிப்புகள், கைப்பைகள் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது.

ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வுக் கூடத்திற்குள்ளோ, வெளியிளோ விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எவ்வித முறைகேட்டிலும் ஈடுபட்டாலும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog