வெயில் கடுமையாக இருக்கு... பள்ளியை 10ஆம் தேதி திறக்காதீங்க..!! ஜூன் 3வது வாரத்திற்கு தள்ளி போடுங்க- ஓபிஎஸ்



வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிகள் 10ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அலை வீசி வருவதன் காரணமாக, மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. 


தமிழகத்தில் வெப்ப அலை


அரசாங்கமே வெளியில் செல்ல வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. பொதுவாக, வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை தாண்டும்போது அதனை வெப்பஅலை என்று சொல்வார்கள். இந்த அளவையும் தாண்டி, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெப்பஅலை வீசிக் கொண்டிருக்கிறது. நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கடலூர், பரங்கிப்பேட்டை, திருத்தணி, ஈரோடு, தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வெப்ப அலை 38 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக வீசி இருக்கிறது. சென்னையில் மட்டும் 41.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப அலை வீசி இருக்கிறது. அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து இருக்கிறது. 


பள்ளிகள் திறப்பு தேதி


ஓரிரு இடங்களில் மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 


கடும் வெயிலின் தாக்கம் என்பது நீரிழப்பு, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகள்


ஜூன் 3வது வாரத்திற்கு தள்ளிபோடுங்க..


அனைத்தும் ஜூன் 6-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், அனைத்து வகைப் பள்ளிகளும் 10-06-2024 அன்று திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


தற்போது தமிழ்நாடு முழுவதும் நிலவும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் மூன்றாவது வாரத்தில் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog