ஆசிரியர் நியமனத் தேர்வு: எந்தெந்த பாடத்தில் எத்தனை தவறான கேள்விகள்? மறு தேர்வு நடத்தப்படுமா?




2023 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத் தேர்வில் எல்லா பாடங்களிலும் பல தவறான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத் தேர்வு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை எழுத மொத்தம் 41,478 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர்.


தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மே 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண்களுடன், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்குத் (TET Paper 2) தகுதி பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டன. மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டது.


இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் பல்வேறு வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தம் 150 கேள்விகளில் ஒவ்வொரு பாடப் பிரிவைப் பொறுத்து 5 முதல் 17 வினாக்கள் வரை தவறாக கேட்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.


பாட வாரியாக, தமிழில் 6 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. அதேபோல ஆங்கிலப் பாடத்தில் 13 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன. கணிதப் பாடத்தில் 17 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன.


இயற்பியல் பாடத்தில் 7 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. வேதியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் 12 வினாக்கள் தவறாக உள்ளன. விலங்கியல் பாடத்தில் இருந்து 3 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன. புவியியல் பாடத்தில் இருந்து 11 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளது. வரலாறு பாடத்தில் இருந்து 13 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது. 


இதனையடுத்து தவறான கேள்விகளுக்கு கேள்விகளுக்கு பதிலளித்த தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம், உரிய கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ஓரிரு கேள்விகள் என்றால் கூட கவனக் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு தேர்விலும் பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதற்கிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இறுதி விடைக் குறிப்பிலும் 2 தவறுகள் இருப்பதாகத் தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், 11 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு எழுதிய நிலையில், அதிலும் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog